ஒரே நேரத்தில் ஓ.பி.எஸ், சசிகலா பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட ஆளுநர் திட்டம்?
ஒரே நேரத்தில் முதல்வர் ஓ.பி.எஸ், சசிகலா ஆகியோரை சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடுவது குறித்து ஆளுநர் யோசித்து வருகிறாராம்.
சென்னை: ஒரே நேரத்தில் அடுத்தடுத்து தங்களது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் உத்தரவிடலாம் என்ற புதிய பரபரப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக சட்டசபை சபாநாயகருடன் ஆளுநர் ஆலோசனை நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இருவரும் ஆட்சிக்கு உரிமை கோரி வருவதால் இருவரையும் ஒரே நாளில் அடுத்தடுத்து பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு உத்தரவிடுவது குறித்து ஆளுநர் சிந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஓ.பன்னீர் செல்வமும் சரி, சசிகலாவும் சரி இருவருமே தங்களுக்கு ஆதரவு இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இருவரையும் ஒரே சமயத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடுவது குறித்து ஆளுநர் சிந்திக்கிறாராம். நேற்று இருவரும் ஆளுநரைச் சந்தித்து தத்தமது கோரிக்கைகளை வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடனும் ஆளுநர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அரசிடமும் அவர் ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பையும் ஆளுநர் கவனத்தில் கொண்டுள்ளார். அதற்கு முரணாக ஆளுநரால் செயல்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் கட்சியே ஆட்சியில் இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பது பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பின் முக்கிய சாராம்சமாகும். எனவே சட்டசபையில்இரு தரப்பையும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடலாம் என்றே எதிர்பார்க்ப்படுகிறது.












Click it and Unblock the Notifications