தனியார் பாலில் ரசாயனமில்லை என நிரூபித்தால் தூக்கில் தொங்குவேன்... ராஜேந்திர பாலாஜி ஆவேசம்
சிவகாசி : தனியார் நிறுவனங்கள் பாலில் வேதிப்பொருட்களை கலக்கவில்லை என்பதை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்யத் தயார், ஏன் தூக்கில் தொங்கவும் தயார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
தனியார் பாலில் ரசாயனங்கள் கலக்கப்படுவதாக பால்வளத்துறை அமைச்சரே கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தனியார் பால் நிறுவனங்களை அமைச்சர் மிரட்டுவதாக சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் சிவகாசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பால் கெடாமல் இருப்பதற்காக மருத்துவ கல்லூரிகளில் உடல் கெடாமல் இருக்க பயன்படுத்தும் வேதிப்பொருளை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார். மாதவரத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் செய்த ஆய்வின் முடிவையே தான் எடுத்துச் சொன்னதாக அமைச்சர் தெரிவித்தார்.
100 சதவீதம் ரசாயனம்
100 சதவீதம் தனியர் நிறுவனங்கள் பாலில் வேதிப்பொருளை கலக்கின்றன. இவை மாநில அரசின் லேப்களில் ஆய்வு செய்யப்பட்டு முன்னோடி மருத்துவர்களைக் கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளன.
முடிவு வந்ததும் நடவடிக்கை
மத்திய அரசின் கீழ் இயங்கும் லேப்களில் சோதனை செய்வதற்காக அவை மைசூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சோதனை முடிவுகள் கிடைத்த பின்னர் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
"நரவை" போய் சாப்பிடுவேனா
மேலும் "எந்தத் தனியார் பால் நிறுவனத்துடனும் நான் தொலைபேசியில் பேசவில்லை, குழந்தைகள் குடிக்கும் பாலில் அவர்கள் கலப்படம் செய்கிறார்கள். அவர்களிடம் காசு வாங்கினால் அது நரவை (மனிதக் கழிவு) சாப்பிடுவதற்கு சமம்" என்றார்.
தூக்கில் தொங்குவேன்
தனியார் நிறுவனத்தினர் பாலில் ரசாயனம் கலக்கவில்லை என்று கூறுகின்றன. அப்படி அவர்கள் அதை நிரூபித்தால் என் பதவியை ராஜினாமா செய்யத் தயார் ஏன், நான் தூக்கில் தொங்கவும் தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக தெரிவித்தார்.