அதிமுகவைப் பற்றி எங்களைவிட ஸ்டாலினுக்கு ரொம்பவும் கவலை... கலாய்க்கும் ராஜேந்திர பாலாஜி
அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை எங்களை விட மு.க.ஸ்டாலின் அதிக அளவில் அக்கறை காட்டுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை : அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை எங்களை விட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிக அளவில் அக்கறை காட்டுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் நாளை தங்குதடையின்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தேவைக்கு அதிகமான அளவில் ஆவின் பால் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், ஒரு சில அமைப்பினர் நாளை வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.
நாளை காலை 6 மணி முதல் பால் விநியோகம் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டே திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சில அமைப்புகளைத்தூண்டி விட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அதிமுகவில் என்ன நடக்கிறது என்று தங்களை விட ஸ்டாலினே மிகவும் கவலைப்படுவதாகவும், அதிமுக ஒரு மிகப்பெரிய கட்சி என்பதால் அதை யாராலும் அழிக்க முடியாது என்றும் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டார்.