தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச் சூடு- தமிழக டிஜிபி
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தமிழக டிஜிபி தெரிவித்தார்.
சென்னை: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 277 ஊழியர்களை மீட்பதற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று தமிழக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து குமரெட்டியாபுரத்தில் 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர் அப்பகுதி மக்கள். இந்நிலையில் 100-ஆவது நாளையொட்டி கடந்த மே மாதம் 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது கலவரம் ஏற்பட்டதை அடுத்து போலீஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு வீடியோ வெளியான நிலையில் ஒருத்தராவது சாகணும் என்று சொல்லிக் கொண்டே மஞ்சள் பனியன் போட்ட போலீஸ்காரர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் டிஜிபி ராஜேந்திரன் பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் , தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை காப்பாற்ற துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த 150 பேருக்கும் ஆபத்தான நிலை ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை என தனது பதிலில் தெரிவித்து உள்ளார் டிஜிபி ராஜேந்திரன்.












Click it and Unblock the Notifications