சட்டசபைத் தேர்தல்... அதிமுகவுக்கு 'ஃபெப்சி' பகிரங்க ஆதரவு!
சென்னை: தமிழ் சினிமாவின் மிகப் பெரிய அமைப்பான தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் - ஃபெப்சி- அதிமுகவுக்கு தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளது.
திரைத்துறையிலும் அரசியல் உலகிலும் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 16-5-2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை 10-5-2016 அன்று (நேற்று) தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும் அகில இந்திய திரைப் படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜி.சிவா, செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.சந்திரன், துணைத் தலைவர்கள் கே.சம்பத், ஏ.சபரி கிரிசன், வி.ராமன், டி.கே.மூர்த்தி, கே.ஜி.ஜீவானந்தம், எஸ்.சுந்தர், இணைச் செயலாளர்கள் ஆர்.தனபால், ஆர்.எஸ்.ராஜா, என்.ராதா, பி.ரமணபாபு ஆகியோர் நேரில் சந்தித்து, அ.தி.மு.க.வுக்கு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், தங்களுடைய அமைப்புகளின் ஆதரவை தெரிவித்தனர்.
அதற்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா தமது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் உள்ள 24 சங்கங்களின் கூட்டமைப்புதான் ஃபெப்சி. இந்த அமைப்பின் ஆதரவின்றி சினிமாவே இயங்காது என்ற நிலை உள்ளது. பல ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பு அதிமுகவுக்கு ஆதரவளித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.