2006 தேர்தலில் ரூ. 40 கோடி... 2016ல் 1500 கோடி.. வைகோவைச் சுற்றி வரும் "கோடி" சர்ச்சைகள்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல்களின் போது அதிமுகவிடம் இருந்து மதிமுக பொதுச்செயலர் வைகோ கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டதாக சர்ச்சை வெடித்துக் கொண்டே இருக்கிறது. 2006 தேர்தலில் அதிமுக அணியில் சேருவதற்காக ரூ40 கோடி பெற்றதாக புகார் எழுந்தது; தற்போது தேமுதிக- திமுக கூட்டணி அமையாமல் தடுக்கும் வகையில் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்க ரூ1,500 கோடியை அதிமுகவிடம் பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தல் களத்தில் பிரதான விவகாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது அதிமுகவிடம் இருந்து மக்கள் நலக் கூட்டணி ரூ1,500 கோடி பெற்றதாக கூறப்படும் விவகாரம்... இந்த விவகாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவரே மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோதான்.

தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டுவர ரூ500 கோடி மற்றும் 80 தொகுதிகள் என திமுக பேரம் பேசியது; பாஜகவோ ரூ1,000 கோடி மத்திய அமைச்சர் பதவி என பேரம் பேசியது என வைகோ பேட்டியளித்திருந்தார்... இந்த பேட்டியே அவருக்கு எதிராக திரும்பிவிட்டது.
இந்த குற்றச்சாட்டை தேமுதிகவே பகிரங்கமாக மறுத்துவிட்டது. திமுகவோ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வைகோ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
இதேபோல் கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலிலும் வைகோ ரூ40 கோடி விவகாரத்தில் சிக்கினார்... அதிமுக கூட்டணியில் சேருவதற்காக ரூ.40 கோடி வைகோ வாங்கியதாக அப்போது சர்ச்சை வெடித்தது. வைகோ கலந்து கொண்ட கூட்டங்களில் எல்லாம் "ரூ.40 கோடி வாங்கினீர்களா"? என குசும்பர்கள் கேள்வி கேட்டனர். இதை தொடக்கத்தில் ரசித்த வைகோ பின்னர் டென்சனாகிப் போனார். அப்படி கேட்ட நபர்களை மதிமுகவினர் தனியே அழைத்துப் போய் 'டின் கட்டி' அனுப்பி வைத்தனர்.
தற்போதைய தேர்தலிலும் வைகோ ரூ. 1,500 கோடி விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலிமர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ஏ.எல். கண்ணன் வைகோவிடம் பேட்டி எடுத்தார். அப்போது, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்குவதற்காக அதிமுகவிடம் இருந்து ரூ1,500 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் டென்சனாகி காலர் மைக்கை தூக்கி வீசி எறிந்துவிட்டு பேட்டியை கேன்சல் செய்கிறேன் என தப்பி ஓடினார் வைகோ.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மட்டுமின்றி அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வைகோ ரூ.1,500 கோடி வாங்கிவிட்டாரா? அப்படி வாங்கவில்லை எனில் பதில் சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே? என்ற அளவுக்கு விவாதப் பொருளாகி விட்டது.
இந்த தேர்தலிலும் வைகோவின் பொதுக் கூட்டங்களில் "அன்று ரூ.40 கோடி என்னாச்சு? இன்று ரூ.1,500 கோடி அண்ணாச்சி?" என்ற கேள்வியை நிச்சயம் குசும்பர்கள் முன்வைக்கத்தான் போகிறார்கள் என்பது சமூக வலைதள விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வைகோ இதை தனக்கே உரிய பாணியில் எதிர்கொள்வாரா? அல்லது அவர் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டிருக்கும் 'விஜயகாந்த்' பாணியில் எதிர்கொள்ளப் போகிறாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications