மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி, அரசு வேலை- தமிழக அரசு
நெல்லையில் மணல் கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியும் அரசு வேலையும் வழங்கப்படுகிறது.
Recommended Video
நெல்லை: நெல்லையில் மணல் கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்ட காவலர் ஜெகதீசன் துரையின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தவர் ஜெகதீசன் துரை. நேற்று நம்பியாற்றில் சிலர் மணலை அள்ளிச் செல்வதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மணல் கொள்ளையை தடுக்க நம்பியாற்றுக்கு விரைந்தார். அதிகாலை நேரத்தில் ஜெகதீசனை கண்ட மணல் கொள்ளையர்கள் அவரை கம்பியால் தாக்கியும் தலையில் அடித்தும் கொலை செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இறந்த ஜெகதீசனின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறுகையில், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்த ஜெகதீசனின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுபோல் ஜெகதீசனின் குடும்பத்தில் தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காவலரையே மணல் கொள்ளையர்கள் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.