அதிமுக என்னும் சிங்கத்தின் மீது உட்கார்ந்த கொசு டிடிவி.தினகரன்.. ஜெயக்குமார் அடுக்குமொழி விமர்சனம்!
அதிமுக என்னும் சிங்கத்தின் மீது உட்கார்ந்த கொசு டிடிவி. தினகரன் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை : அதிமுக என்னும் சிங்கத்தின் மீது உட்கார்ந்த கொசு டிடிவி. தினகரன் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தினகரன் தொடங்குவது அணியல்ல தமிழ்நாட்டிற்கு பிடித்திருக்கும் சனி என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது : தமிழக அரசுக்கு சட்டசபையில் பெரும்பான்மை இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறப்பான பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்யும். பட்ஜெட்டை நான் தாக்கல் செய்தால் என்ன துணை முதல்வர் தாக்கல் செய்தால் என்ன?
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே செயல்படுத்தப்படவில்லை என்பது தவறான கருத்து. ஒரு சில திட்டங்கள் நீண்ட கால திட்டங்களாக இருக்கும். மெட்ரோ ரயில் திட்டம் பற்றி கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அதன் பின்னர் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று செயல்படுத்த முடியும் எனவே இவையெல்லாம் உடனடியாக செய்யவில்லை என்று கூற முடியாது.

பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது அரசு
தொலைநோக்கு திட்டங்களுக்கான விதை போடப்பட்டுள்ளது, அது நாளடைவில் நிறைவேற்றப்படும். அருதிப்பெரும்பான்மையோடு நாங்கள் ஆட்சி செய்து வருகிறோம். தமிழக அரசு பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

திமுகவினர் கவலையில் உள்ளனர்
திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வருவது அவர்களின் துயரத்தின் வெளிப்பாடு. ஆட்சியமைக்க முடியவில்லை, தேர்தல் வரும் என்று நினைத்தார்கள் அது முடியவில்லை,ஆட்சியை கவிழ்க்க நினைத்தார்கள் அது முடியவில்லை அதனால் கவலையின் உச்சகட்டத்தில் இருக்கும் இவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டசபை கூடுகிறதா என்பதை பேரவையே முடிவு செய்து அறிவிக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எம்பிகள் 8 நாட்களாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

தினகரன் தொடங்குவது அணியல்ல சனி, பிணி
அதிமுக என்னும் சிங்கத்தின் மீது ஒரு சின்ன கொசு உட்கார்ந்து போனது, அது வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. தினகரன் சொல்வது போல அவர் தொடங்குவது அணியல்ல தமிழ்நாட்டிற்கு பிடித்திருக்கும் சனி. சனி விலகியதால் பிணியும் விலகியது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் இன்று கொள்ளை கும்பலின் ஆட்சி இல்லாமல் நிம்மதியாக இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications