மழை வெள்ளத்திற்குப்பின் மக்களின் அதிருப்தியை சம்பாதித்த ஜெ. அரசு: கருத்துக்கணிப்பு
சென்னை: மழைக்கு பின்னர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாட்டில் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு தமிழகத்தில் வெற்றிவாகை சூடியது அதிமுக. தமிழக சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்ட நிலையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழை மக்களின் மனநிலையை மட்டுமல்ல ஆள்பவர்கள், எதிர்கட்சியினரின் மனநிலையையும் மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
எனவேதான் எதிர்கட்சியினர் மட்டுமல்லாது ஆளும்கட்சியும் கூட்டணிக்கு ஆள் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்களின் அதிருப்தி இப்போது எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பிலும் தெரியவந்துள்ளது.

மக்கள் ஆய்வகம் கருத்துக்கணிப்பு
லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் மக்கள் ஆய்வகம், தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுவிலக்கு, மழை வெள்ள பாதிப்பு போன்றவை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 120 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 5,464 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது

முக்கிய பிரச்சினைகள் எவை எவை?
இதன் முடிவுகள் சென்னையில் இன்று வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக அரசுத் துறைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல் என 36 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். மதுப் பிரச்சனை என 23.4 சதவிகிதம் பேரும், குடிநீர் பிரச்சனை என்று 14.2 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

மதுவிலக்கு சாத்தியமில்லை
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென 25.7 சதவிகிதம் பேரும், அமல்படுத்தவது சாத்தியமில்லை என 51.9 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.

திமுக - அதிமுக
தனிப்பட்ட கட்சிகளாக ஆட்சியைப் பிடிப்பதில், அதிமுகவுக்கு 33.03 சதவிகித வாக்குகளும், திமுகவுக்கு 33.01 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.

ஆளும் கட்சி மீது அதிருப்தி
சென்னை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்த மழைக்கு பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. காரணம் வெள்ள நிவாரணம் சரியான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேரவில்லை. வெள்ள நிவாரணத்தின் மீது ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களும் மக்களின் அதிருப்திக்கு காரணமாக கூறப்படுகிறது.

குறைந்து போன ஆதரவு
2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை முதல்வர் ஜெயலலிதாவின் செயல்திறன் நன்றாக இருந்ததாக 55.2 சதவீதம் பேர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் 2015ம் ஆண்டு அ.தி.மு.க. அரசின் செயல்பாட்டில் 33 சதவீதம் பேரே திருப்தி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications