பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது.. தமிழக அரசு அறிவிப்பு
தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்களுக்கு அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரியார் விருது அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது.
சென்னை: தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்காக விருதுகளைப் பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளுவர் விருதுக்கு புலவர் பா. வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தந்தை பெரியார் விருதுக்கு பண்ருட்டி ராமச்சந்திரனும், அம்பேத்கர் விருது, மருத்துவர் இரா. துரைசாமிக்கு வழங்கப்பட உள்ளன.
மேலும், அண்ணா விருதுக்கு கவிஞர் கூரம் மு.துரை, காமராஜர் விருதுக்கு டி. நீலகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரதியார் விருதுக்கு முனைவர் ச. கணபதிராமன், பாரதிதாசன் விருதுக்கு கவிஞர் கோ. பாரதி, திரு.வி.க. விருதுக்கு போராசிரியர் மறைமலை இலக்குவனாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கி. ஆ.பெ. விஸ்வநாதன் விருதினைப் பெற மீனாட்சி முருகரத்தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதுகளை வரும் 15ம் தேதி, காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வழங்குகிறார்.
விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், இந்த விழாவில் 50 வயதையடைந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் அரசாணைகள் அளிக்கப் படஉள்ளன.