தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஜெ. அரசின் ஒத்துழைப்பு இல்லை: ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா
சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
வேலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா வெள்ளிக்கிழமை சென்னை வந்தார். ராயபுரம் ரயில் நிலையத்தை பார்வையிட்ட அவர் பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

பங்களிப்பு
தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான செலவு தொகையில் மாநில அரசின் பங்களிப்பு என்பது சுத்தமாக இல்லை. அதே சமயம் கர்நாடக அரசு ரயில்வே திட்டங்களுக்காகு இலவசமாக நிலம் அளித்ததுடன் செலவில் 50 சதிவிகிதத்தை ஏற்றுள்ளது.

ஜெயலலிதா
ரயில் திட்டங்களுக்கான செலவில் 50 சதவிகிதத்தை ஏற்றால் திட்டங்களை விரைந்து முடிக்கலாம் என்று நான் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை. அதனால் ரயில்வே திட்டங்களுக்கு நிதியுதவி செய்யுமாறு கூறி ஜெயலலிதாவுக்கு நான் மீண்டும் கடிதம் எழுதுவேன்.

ஒத்துழைப்பு
தமிழகதத்தில் நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன. ஆனால் மாநில அரசு முழுமையான ஒத்துழைப்பை அளிக்கவில்லை.

தொழிற்சாலை
தமிழகத்தில் ரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.

செங்கோட்டை புனலூர்
செங்கோட்டை புனலூர் ரயில் திட்டத்திற்காக கடினமான நில பரப்புகள் வழியாக பாதை அமைக்க வேண்டும் என்பதால் கால அவகாசம் தேவை. இத்திட்டத்தை முடிக்க ரூ.300 கோடி தேவைப்படும். இத்திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை
மதுரை கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வு முடிந்தவுடன் திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபப்படும்.

அதிவேக ரயில்
சென்னை, பெங்களூர் இடையே அதிவேக ரயில் இயக்குவது குறித்து சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சீன அதிபர் ஜின்பிங் அண்மையில் இந்தியா வந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து ஆய்வு நடத்தி விரைவில் அதிவேக ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் சதானந்த கவுடா.












Click it and Unblock the Notifications