உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யாவிற்கு ரூ.11,250 மாதாந்திர உதவித்தொகை - தமிழக அரசு
சென்னை: ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.11,250 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்,22. தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்த இவர், தன்னுடன் பயின்ற திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், கடந்த மார்ச் 13ம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே ஒரு கும்பல் இருவரையும் சராமாரியாக வெட்டியது. சிகிச்சை பலனின்றி சங்கர் மரணமடைந்தார். கவுசல்யா படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கரின், மனைவி கவுசல்யாவுக்கு மாதந்தோறும் 11,250 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், கவுசல்யாவுக்கு மாதந்தோறும் 11,250 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கு சத்துணவுத் துறையில் பணி வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு இதற்கான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில், 10வது குற்றவாளியான பிரசன்னா என்பவர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். எனினும், ஜாமின் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். பிரசன்னாவுக்கு ஜாமின் வழங்கினால் கவுசல்யாவின் உயிருக்கு ஆபத்து எற்படும் என்றும் அவர் கூறினார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி வைத்தியநாதன், பிரசன்னகுமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் உடுமலைப் பேட்டை மாவட்ட நீதிமன்றம், வழக்கை தினமும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.