ஏப்.24-ல் ஐ.டி. நிறுவனங்கள் உள்பட அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் விடுப்பு: தமிழக அரசு
சென்னை: லோக்சபா தேர்தல் நாளான இம்மாதம் 24-ம் தேதி மாநிலம் முழுவதும் ஐ.டி. நிறுவனங்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைதேர்தல் 24.04.2014 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
1951-ம் வருட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 135B-ன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உட்பட), உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ( தினக்கூலி / தற்காலிக / ஒப்பந்த பணியாளர்கள் உட்பட) தேர்தல் நாளான 24.04.2014 (வியாழக்கிழமை) அன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்கப்படவேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications