தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு... பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் அதிகரிப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டம் 100-ஆவது நாளை எட்டியது. இந்நிலையில் பேரணியாக ஆட்சியரிடம் மனு கொடுக்க மக்கள் புறப்பட்டனர்.
144 தடை உத்தரவு விதிக்கப்பட்டு அதையும் மீறி அவர்கள் சென்றதால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் முன்னோக்கி சென்று கொண்டிருந்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர்.
இந்நிலையில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிதியுதவி போதாது என்றும் அதிகரித்து வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், பாதிக்கப்பட்ட மக்களும் வலியுறுத்தினர். இதையடுத்து இன்றைய தினம் நிதியுதவி தொகையை முதல்வர் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவி ரூ. 5 லட்சமும்,
லேசான காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் ரூ.1.5 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.