நெல்லையில் ஆட்சியர் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு!
கோவையைத் தொடர்ந்து நெல்லையிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு நடத்தினார்.
நெல்லை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெல்லையில் ஆட்சியர் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் இன்று பல மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் அண்மையில் நியமிக்கப்பட்டார். தமிழக அரசியல் சூழலில் அரசியல் ரீதியான பன்வாரிலால் ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாம் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் கோவையில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற கையோடு மாவட்ட நிர்வாகம் குறித்து அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தினார். இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருப்பூர் ரிட்டர்ன்
அத்துடன் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்குப் போய் தூய்மை பணிகளையும் மேற்கொண்டார் புரோஹித். இதுவும் சர்ச்சையானது. அதேநேரத்தில் விடாது கருப்பாக திருப்பூருக்கும் போய் மாவட்ட நிர்வாகத்தில் தலையிடுவேன் என்றார் ஆளுநர். ஆனால் கடுமையான எதிர்ப்பின் காரணமாக மாவட்ட நிர்வாகங்களில் தலையிடாமல் இருந்தார் புரோஹித்.

பட்டமளிப்பு விழா
இந்நிலையில் இன்று நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புரோஹித் பங்கேற்றார். அத்துடன் பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்று திடீரென தூய்மைப் பணியில் ஆளுநர் புரோஹித் ஈடுபட்டார்.

புதிய சர்ச்சை
மேலும் அங்கு சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுக்கும் புரோஹித் அறிவுறுத்தல் விடுத்தார். இப்போது இந்த விவகாரமும் சர்ச்சையாகி உள்ளது.

பல மணிநேர ஆலோசனை
அத்துடன் ஆட்சியர் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் பன்வாரிலால் புரோஹித் இன்று பல மணிநேர ஆலோசனை நடத்தினார். இதேபோல் வட்ட அளவிலும் ஆளுநர் ஆலோசனை நடத்தக் கூடும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications