விடை பெற்றார் ரோசய்யா - மகா.ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநர்!
சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக ஆளுநராக கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர் ரோசய்யா. மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதும் காங்கிரஸ் ஆளுநர்கள் அனைவரும் மாற்றப்பட்ட நிலையில் ரோசய்யா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பதவியில் தொடர்கின்றனர்.
ரோசய்யாவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. வழக்கமாக ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களுக்கு பின் அவர்கள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு சென்று பதவியேற்பர்.
ஆனால் தமிழகத்துக்கு புதிய ஆளுநர் யாரும் அறிவிக்கப்படாததால் ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் என கூறப்பட்டு வந்தது. மேலும் ரோசய்யா ஆளுநராக தொடர முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஏற்கனவே கர்நாடகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சங்கர மூர்த்தியை தமிழக ஆளுநராக நியமிக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்காமல் மத்திய அரசு இன்று அவரை விடுவித்தது. மேலும் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.