விதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும்.. இதுவே சென்னை சில்க்ஸ் சொல்லும் பாடம்.. ராமதாஸ்!
சென்னை: விதிகளை மீறி தி.நகரில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும் என்பதே சென்னை சில்க்ஸ் சொல்லும் பாடமாக உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
தியாகராய நகரில் உள்ள 7 மாடிகளைக் கொண்ட சென்னை சில்க்ஸ் கடையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து 15 ஊழியர்களை உயிருடன் மீட்டனர்.
சுமார் 12 மணி நேரம் போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தரைதளத்திலிருந்து தீயானது 7 மாடிகளுக்கும் பரவியது. இதனால் துணி, பிளாஸ்டிக் என ரூ.1000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராமதாஸ் அறிக்கை
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீயை அணைக்க 10 மணி நேரத்துக்கு மேலாக போராடடி வருகின்றனர். எனினும் முடியவில்லை. அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வழக்கமாக பெரிய அளவிலான கட்டடங்கள் கட்டப்படும் போது அதன் மொத்த நிலப்பரப்பில் 10 சதவீதம் திறந்தவெளிப் பரப்பாக ஒதுக்கப்பட வேண்டும்.

ஊழல் நடந்துள்ளது
அதுமட்டுமின்றி, பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்படும் போது சாலையிலிருந்து குறைந்தபட்சம் 6 மீட்டர் தொலைவுக்கு தான் கட்டடம் கட்டப்பட வேண்டும். அத்துடன், பக்கவாட்டில் தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியாக குறைந்தபட்சம் 20 அடி அகலத்திற்கு பாதைக்காக நிலம் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இந்த விதிகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. இவ்வளவு விதிமீறல்களுக்குப் பிறகும் சென்னை சில்க்ஸ் கட்டடத்திற்கு அனைத்துத் துறைகளும் அனுமதி அளித்ததன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவிட்டும்...
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் 4 தளங்கள் மட்டுமே கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விதிகளை மீறி 8 மாடிகள் கட்டப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2007-ஆம் ஆண்டு விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டன. ஆனாலும், அடுத்த சில மாதங்களில் இடிக்கப்பட்ட தளங்கள் மீண்டும் கட்டப்பட்டன. இவ்வாறு விதிமீறல் தொடர்ந்ததால் தான் விபத்துக்களும், சேதங்கள் தடுக்க முடியாமல் போய்விட்டன.

நடவடிக்கை தேவை
சென்னையிலுள்ள விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது என்பது ஊழலுக்கு வழிவகுக்கும். மாறாக, அவற்றை இடித்து விட்டு விதிகளுக்குட்பட்டு கட்டுவது தான் சரியானதாக இருக்கும். அப்போது இதுபோன்ற தீ விபத்துக்கள் ஏற்படும் போது சேதத்தையும், உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். எனவே, சென்னை சில்க்ஸ் தீ விபத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications