மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள் எவை?.. இன்று அல்லது நாளை வெளியாகிறது அறிவிப்பு!
சென்னை: 500 மதுக் கடைகள் மூடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள நிலையில் எந்தெந்த கடைகளை மூடலம் என்ற பட்டியலை டாஸ்மாக் அதிகாரிகள் தயாரித்து வருகின்றனராம். இதுதொடர்பான கணக்கெடுப்பையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனராம்.
இந்தக் கணக்கெடுப்பில் அதிக வருவாய் இல்லாத கடைகளாகப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து சேர்த்து வருகிறார்களாம். மேலும் முக்கியத்துவம் இல்லாத இடங்களில் உள்ள கடைகளையும் இதில் சேர்த்து வருகின்றனராம்.
மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றதும் முதல்வர் ஜெயலலிதா முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று டாஸ்மாக் கடைகளின் திறப்பு நேரம் குறைப்பு மற்றும் 500 கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு. நேரக் குறைப்பு அமலுக்கு வந்து விட்டது. அடுத்து கடைகளை மூடும் நடவடிக்கை தொடங்கவுள்ளது.
தற்போது எந்தெந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை முதல் கட்டமாக மூடுவது என்று டாஸ்மாக் அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள். பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மது கடைகள், வழிபாட்டு ஸ்தலங்கள் அருகே உள்ள மது கடைகள், மார்க்கெட் அருகே உள்ள மது கடைகள் கடை வீதியில் உள்ள மது கடைகள் என மாவட்டத்திற்கு 15 கடைகள் வீதம் மொத்தம் 500 கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய் அதிகம் இல்லாத கடைகள் இந்தப் பட்டியலில் அதிகம் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. மூடப்படும் கடைகள் எவை என்ற அறிவிப்பு இன்று அல்லது நாளைக்குள் தெரிய வரும் என்று தெரிகிறது.