Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவர்களை ”ஆல் பாஸ்” போட்டே ஆகணும் - தமிழக அரசிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வெள்ள பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசினை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கையில், ''வரலாறு காணாத மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரின் சில பகுதிகளில் இன்னும் வெள்ளம் முழுமையாக வடியவில்லை என்றாலும், பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.

TN Govt must announce all pass - Ramadoss

வெள்ளம் வடியாத பகுதிகளில் இயல்பு நிலையை ஏற்படுத்தவும், மற்ற பகுதிகளில் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

நாற்றம் எடுக்கும் பொருட்கள்:

சென்னையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் பல அடிக்கு வண்டல் மண் படிந்துள்ளது. வீடுகளில் இருந்த படுக்கை, தலையணைகள் போன்ற வீட்டு பயன்பாட்டு பொருட்களும், உணவுப் பொருட்களும் வெள்ள நீரில் ஊறி பாழாகி நாற்றம் எடுக்கத் தொடங்கிவிட்டன.

நோய்க்கிருமிகள் ஆபத்து:

இவ்வாறு பாழான பொருட்கள் சாலைகளிலும், தெருக்களிலும் கொட்டப்பட்டிருப்பதால் அவற்றிலிருந்து நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து உள்ளது. அதேபோல் கிட்டத்தட்ட வெள்ளம் பாதித்த அனைத்துப் பகுதிகளிலும் கழிவு நீரும், குடிநீரும் கலந்திருப்பதால் அதன் மூலமாக நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

உடனடியாக அகற்ற நடவடிக்கை:

நோய்கள் பரவுவதைத் தடுக்க வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற போதிலும், சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது இது போதுமானது அல்ல.

மருத்துவ முகாம்கள் அவசியம்:

எனவே, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பணியாளர்களை அழைத்து வந்து துப்புரவு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, வெள்ளம் பாதித்த அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்பு புகைத் தெளித்தல், கிருமி நாசினி தெளித்தல், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள், பாதாள குடிநீர் சேமிப்புத் தொட்டி உள்ளிட்ட அனைத்து குடிநீர் ஆதாரங்களிலும் குளோரின் சேர்த்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசும், சென்னை மாநகராட்சியும் மேற்கொள்ள வேண்டும். அனைத்து வட்டங்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தி நோய்த்தடுப்பு மருந்து வழங்க வேண்டும்.

அரசு முன்வர வேண்டும்:

தொடர்ந்து பெய்த மழையால் அனைத்து உடைமைகளையும் இழந்துவிட்ட மக்கள், புதிதாக வாழ்க்கையைத் தொடங்க வழியில்லாமல் தவிக்கின்றனர். வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அவர்கள் வாழ வழி காட்ட வேண்டியது தமிழக அரசின் கடமை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதன்படி வெள்ளத்தில் சிக்கி மீண்ட மக்கள் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கு வசதியாக அனைத்து குடும்பங்களுக்கும் தலா ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு, இரு பாய்கள் மற்றும் தலையணைகள், 25 கிலோ அரிசி, 10 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை கொண்ட தொகுப்பை பாதிக்கப்பட்ட மக்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்று வழங்க அரசு முன்வர வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.

மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்:

மேலும், வெள்ள நிவாரணமாக அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவியை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு தடையாக இருப்பதாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள சிறிதளவு பணமும் மதுக்கடைகளுக்கு செல்வதாலும் அனைத்து மதுக்கடைகளையும் இரு வாரங்களுக்கு மூட வேண்டும்.

மாணவர்கள் பாதிப்பு:

இதற்கெல்லாம் மேலாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்களின் நிலைமைதான் மிகவும் பரிதாபமாக உள்ளது. வெள்ளத்தின் கோரத் தாண்டவத்திற்கு உடைமைகள், ஆடைகள் ஆகியவை மட்டுமின்றி பாட நூல்களையும் மாணவர்கள் இழந்துள்ளனர். குடிசைகள், ஆற்றங்கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கடந்த ஒரு மாதமாக அனுபவித்து வரும் துயரம் அவர்களை மனதளவில் மிக மோசமாக பாதித்திருக்கிறது.

உறுத்தும் மன அழுத்தம்:

சில மாணவர்கள் தங்கள் கண் எதிரிலேயே குடும்ப உறுப்பினர்களை வெள்ளத்திற்கு பலி கொடுத்துள்ளனர். இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள மாணவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகும். இம்மாணவர்களால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வுகளை எழுதுவதோ, மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள இறுதித்தேர்வுக்கு தயாராவதோ சாத்தியமில்லை.

பொதுத் தேர்ச்சி உதாரணம்:

கடந்த 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நச்சுவாயுக் கசிந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாயினர். இதனால் போபால் மாவட்டத்தை பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து அங்கு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் அர்ஜுன்சிங் ஆணையிட்டார். அதன்படி அங்கு அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்திலும் தேவை:

அதேபோல், தமிழ்நாட்டிலும் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12 ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும். அதற்கு முன்பாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வுகளை வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும் ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+