மலிவு விலை மருந்தகங்கள்: சென்னையில் தொடங்கும் தமிழக அரசு
சென்னை: ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் மலிவு விலை மருந்து விற்பனை நிலையங்களை தமிழக அரசு அடுத்த வாரம் தொடங்க உள்ளது.
முதல் கட்டமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு வாரத்தில் திறக்க உள்ளது.
மலிவு விலையில் உணவு, காய்கறிகளை திறந்து ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பராட்டினை பெற்றுள்ள தமிழக அரசு மருந்தகங்களையும் தொடங்க உள்ளது.

நோய் பாதிப்பு
தமிழகத்தில் டெங்கு, சிக்கன் குனியா என பல விதமான நோய்கள் பரவி மக்களை பாதிப்பிற்கு ஆளாக்குகின்றன. தவிர நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் ஆளாகியுள்ள ஏழை, நடுத்தர மக்கள் அதிக விலையுள்ள மருந்துகளை வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கூட்டுறவுத்துறை மூலம் விற்பனை
மக்களின் கஷ்டத்தை போக்க, கூட்டுறவுத் துறை மூலம் 7 இடங்களில் டி.யு.சி.எஸ். மருந்து கடைகள் தொடங்கப்பட்டன. ஆனால், இங்கேயும் தனியார் மருந்து கடைகளில் விற்கப்படும் விலையிலேயே மருந்துகள் விற்கப்பட்டதால் மக்களுக்கு இதனால் எவ்வித பயனும் இல்லை.

மலிவு விலை மருந்துகள்
இந்நிலையில், குறைந்த விலையில் உயர்ந்த உயிர்காக்கும் மருந்து விற்பனையை தொடங்க தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருந்து விற்பனை ஒரு வாரத்தில் தொடங்கப் பட உள்ளது. இதற்காக மருத்துவமனை, புறநோயாளிகள் பிரிவு அருகில் 200 சதுர அடியில் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

மருந்துக்கடைகள் பற்றாக்குறை
தற்போது தமிழகம் முழுவதும் 32,336 தனியார் மருந்து கடைகள் உள்ளன. 2,230 பேருக்கு ஒரு மருந்து கடை என்ற விகிதத்தில் உள்ளது. இந்த குறையை போக்கும் வகையிலும், குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் கிடைக்க வேண்டும் என்ற வகையிலும் மலிவு விலை மருந்துகடைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.

பொதுமக்கள் வரவேற்பு
அம்மா உணவகம், மலிவு விலை காய்கறி விற்பனை மையத்தை தொடங்கியுள்ள தமிழக அரசு, குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் திட்டம் பொதுமக்களை ஆறுதல் அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications