சம்பா சாகுபடிக்கு தடையில்லா விதை, உரங்கள்... தமிழக அரசு உத்தரவு!
சென்னை: விவசாயிகளுக்கு விதைகள், உரங்களை தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வேளாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துறையின் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பேசுகையில், "காவிரிப் பாசனப் பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடியை முழு வீச்சில் மேற்கொள்ளத் தேவைப்படும் விதை, உரங்கள், நுண்ணூட்ட உரங்களை தேவையான அளவு இருப்பு வைத்து விவசாயிகளுக்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்.
மண்வள அட்டை இயக்கம், டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் பங்கேற்கும் திட்டங்களான தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலைப் பணிகளை விரைந்து முடிப்பதுடன், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் வாழை சாகுபடியாளர்கள் பங்கேற்றுப் பயன் அடையலாம்.
வேளாண் திட்டத்துக்கான இடுபொருள்களை உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு திட்டப் பயன்கள் விரைந்து சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications