மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவரா? உங்க பிள்ளைகளுக்கு தட்டம்மை தடுப்பு ஊசி போட்டாச்சா?
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் தட்டம்மை தடுப்பூசி முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறும்படி மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தட்டம்மை தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட நபர்கள் வரை இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

ஏற்கனவே, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தட்டம்மை தடுப்பூசி முகாகம்கள் கடந்த 11-ம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து நேற்று முதல் தட்டம்மை தடுப்பூசி முகாம்கள் கடலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இம்முகாம்கள் மூலம் சுமார் 7.65 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இம்முகாம்கள் மூலம் நேற்று வரை 1,41,470 நபர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி முகாம்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடையும் வரை தொடர்ந்து செயல்படும். இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள இம்முகாம்களுக்குச் சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு தட்டம்மை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications