ஜல்லிக்கட்டு கைவிரித்த மத்திய சர்க்கார்... என்ன செய்யப் போகிறது ஜெ. அரசு?
சென்னை: ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு கட்டாயம் நடக்கும் என வாய்ப்பந்தல் போட்டு கடைசியில் மாநில அரசுதான் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று கையை விரித்துவிட்டது மத்திய அரசு. சட்டவல்லுநர்கள் பலரும் சுட்டிக்காட்டிய பின்னரும்கூட முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு இன்னமும் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தைப் பிறப்பிக்க 'அவசரம்' காட்டுவதாகத் தெரியவில்லை.
ஜல்லிக்கட்டு நடத்த எப்படியும் அனுமதி கொடுத்துவிடும் என்பதுதான் 6 மாத காலமாக மத்திய அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர்கள் கொடுத்த வாக்குறுதி. இந்த களேபரங்களுக்கு மத்தியில் திடீரென ஒரு அறிவிக்கையை வெளியிட்டு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்றது மத்திய அரசு.
ஆனால் அந்த அறிவிக்கை வந்த போதே இது உச்ச நீதிமன்றத்தில் நிச்சயம் நிற்காது என்றே கூறப்பட்டது. மத்திய அரசின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியத்தின் ஆலோசனை இல்லாமலேயே இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதால் இது செல்லாதது என்று கூறப்பட்டதையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து இடைக்கால தடை விதித்துவிட்டது.
கைவிரித்த மத்திய அரசு
இதன்பின்னர் நேற்று தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நிராகரிக்காமல் தடை நீடிக்கும் என்றே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிவிட்டனர். இதனிடையே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துவிட்டதால் மத்திய அரசால் அவசர சட்டம் கொண்டுவர முடியாது; ஆனால் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வரலாம்; அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று கூறிவிட்டார். அதாவது பந்தை மாநில அரசின் பக்கம் தள்ளிவிட்டது மத்திய அரசு.
அதிகாரம் இருக்கு... ஆனால்
தமிழக அரசுக்கு, ஒரு மாநில அரசுக்கான அதிகாரத்தின் அடிப்படையில் இப்படியான ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வரலாம் என முன்னாள் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ, வள்ளிநாயகம் போன்றோர் சுட்டிக்காட்டி வருகின்றனர். தற்போது மத்திய அமைச்சரும் கூட இதையே சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் தமிழக அரசு இதுவரை மவுனமாகவே இருந்து வருகிறது.
மல்லுக்கட்டாமல் பம்மும் தமிழக அரசு
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்த தமிழக அரசு அதை விரைவுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மல்லுக்கட்டவில்லை. மத்திய அரசு அறிவிக்கைவிட்ட வெளியிட்டதற்கு எதிரான வழக்கில் ஒப்புக்கு ஆஜராகி ஆணித்தரமான வாதங்களை முன்வைக்காமல் தமிழக அரசு வழக்கறிஞர் பொத்தாம் பொதுவாகத்தான் வாதிட்டிருக்கிறார் என்பதை விலங்குகள் ஆர்வலரான ராதாராஜன் போன்றோரே பகிரங்கமாக கூறுகின்றனர்.
நேற்றைய விசாரணையில்...
இதற்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரும் 5 மனுக்கள் மீதான நேற்றைய விசாரணையின் போது, கூடுதல் நிபந்தனையும் விதித்து கொள்ளுங்கள்.. ஏற்பாடுகள் எல்லாம் நடந்துவிட்டது... இடைக்கால அனுமதி கொடுங்கள் என 'மனுதாரர்களின்' வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அப்போது தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகி, "ஆமாம் நீங்கள் விதிக்கிற அத்தனை நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்கிறோம். அதற்கான உத்திரவாதத்தை நாங்கள் தருகிறோம். ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி தாருங்கள்" என உறுதிமொழி அளித்திருந்தால் போதும்... நிச்சயம் நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால அனுமதி கிடைத்திருக்கும் என்கின்றனர் டெல்லி பத்திரிகையாளர்கள்.
ஆனால் இப்படி ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படுகிறது; அது பிற்பகல் விசாரணைக்கு வருகிறது என காலை 10 மணி முதல் தெரிந்த போதும் கூட இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது தமிழக அரசு வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகவில்லை; அந்த பக்கமே அவர்கள் எட்டிப்பார்க்கவில்லை; அதனாலேயே ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால அனுமதி கிடைத்திருக்க வேண்டிய ஒரு வாய்ப்பும் பறிபோய்விட்டது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இப்படி தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்றத்துடன் மல்லுக்கட்டாமல் பம்மிக் கொண்டிருக்கிறது ஜெயலலிதா அரசு!