தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது... ஹைகோர்ட் அதிரடி
சென்னை : உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும் நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், பார்த்திபன் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையம் புதன்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தேர்தல் ஆணையத்தின் மனுவை அவசர வழக்காக இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று கூறியுள்ளனர்
தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகி தேதிகளில் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 25ம் தேதி மாலை அறிவித்தது. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவதற்கு போதிய அவகாசம் கொடுக்கவில்லை என திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திமுக மனு
திமுக தனது மனுவில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு ஆணையை அவசரகதியில் வெளியிட்டதாகவும், இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என கூறியும் திமுக வழக்கு தொடர்ந்தது. தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தது.
உள்ளாட்சித் தேர்தல் ரத்து
இந்த மனுவை செவ்வாய்கிழமையன்று விசாரித்த நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அரசின் 3 அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டார். புதிய அறிவிப்பாணைகள் வெளியிட்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் எனவும், அதுவரை உள்ளாட்சி நிர்வாகத்திற்கு தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
வேட்பாளர்கள் கலக்கம்
உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கு ஆளும்கட்சி தவிர அனைத்து அரசியல் கட்சியினரும் வரவேற்பு அளித்தனர். அதே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 4.97 லட்சத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கலக்கமடைந்தனர்.
மாநில தேர்தல் ஆணையம் அப்பீல்
உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் புதன்கிழமையன்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டனர்.
அவசர வழக்காக விசாரணை
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தனி நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இது மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.