கோவை சோமனூர், நீலாம்பூரைத் தொடர்ந்து பொறையார்- உயிரை பறிக்கும் அரசு கட்டிடங்கள் சீரமைக்கப்படுமா?
உயிரை பறிக்கும் அரசு கட்டிடங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என்கிற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை: கோவை சோமனூர், நீலாம்பூரைத் தொடர்ந்து நாகை பொறையாரில் அரசு கட்டிட மேற்கூரை இடிந்து உயிர் பலி எடுத்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சோமனூர் அரசு பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சோமனூரில் விசாரணை
இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சுகன்தீப்சிங் பேடி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் சோமனூரில் விசாரணை நடத்தினார்.
மேற்கூரை இடிந்து விழுந்தது
இந்த விசாரணையின் போது கோவை நீலாம்பூர் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து பெற்றோரே அப்பள்ளிக்கு இழுத்துப் பூட்டி சீல் வைத்தனர்.
பொறையாரில் 8 பேர் பலி
இதேபோல் கோவை மாவட்டத்தில் 44 அரசு பள்ளிகளின் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில்தான் நாகை பொறையாரில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் மேற்கூரை இடிந்து விழுந்து 8 பேர் பலியாகி உள்ள சோகம் நிகழ்ந்துள்ளது.
எமனாகும் அரசு கட்டிடங்கள்
அரசு கட்டிடங்கள் உயிரை பறிக்கு எமனாக விஸ்வரூபமெடுத்திருக்கின்றன. ஆகையால் போர்க்கால அடிப்படையில் அரசு கட்டிடங்களை சீரமைக்க வேண்டியது தமிழக அரசின் முதன்மை கடமை.