சென்னை உயர்நீதிமன்றம் முற்றுகை .. பெண் வழக்கறிஞர் உள்பட ஏராளமானோர் கைது !
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெண் வழக்கறிஞர்கள் உள்பட ஆயிரக்கணக்கான வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரம் போராட்டம் நடத்தியதால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலுக்கும் வந்துள்ளது.

வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதை வாபஸ் பெற வலியுறுத்தியும், கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் பிரதான வாயிலை முற்றுகையிட முயன்ற வழக்கறிஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்ற வழக்கறிஞர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். இதனால் போலீஸாருடன் வாக்குவாதம் நடைபெற்றது. தடுப்புக் கட்டையை தள்ளிக்கொண்டு வழக்கறிஞர்கள் உள்ளே நுழைய முயன்றதால் போலீசார், வக்கீல்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரம் போராட்டம் நடத்தியதாக போலீசார் கூறினர். இதையடுத்து இரவில் உயர்நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்ற வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான பெண் வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே புதிய சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டு குழு அறிவித்துள்ளது. மேலும் நாளை முதல் நீதிமன்றங்களுக்கு செல்ல மாட்டோம் என போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திருமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications