டூவிலரை ஓரமாக நிறுத்தி விட்டு.. டேபிளை இழுத்துப்போட்டு 9 பேருடன் உண்ணாவிரதம் இருந்த 'குடிமகன்'கள்!
சென்னை: எத்தனையோ உண்ணாவிரதப் போராட்டங்களைக் கண்டு களித்துள்ள சென்னை இன்று ஒரு வித்தியாசமான உண்ணாவிரதத்தையும் பார்த்து ரசித்தது.
வழக்கமான பந்ததல் ஏதும் இல்லாமல், பிரமாண்ட பேச்சுக்கள், பிரமிக்க வைக்கும் கூட்டம் என்று எதுவும் இல்லாமல் படு சாதாரணமாக, சிம்பிளாக நடந்த உண்ணாவிரதம் இது.

நடத்தியவர்கள் குடிகாரர்கள்.. அதாவது தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம். அதாவது விடாக் குடிகாரர்கள், மொடாக் குடிகாரர்களுக்கு ஆதரவான சங்கம் இது.
ஏற்கனவே இந்த சங்கத்தினர் குடித்தததும் போதை ஏறும், ஏறியதும் வேட்டி பேன்ட் கழன்று விழும், நாமும் ரோட்டோரமாக விழுந்து கிடப்போம். "அசிங்கத்தைப்" பார்த்து ரோட்டில் போவோர் வருவோர் சிரிப்பார்கள், கேவலமாகி விடும். எனவே டவுசர் மாடல் ஜட்டிகளையே மறவாமல் அணிவோம் என்று போஸ்டர் போட்டு பிரசாரம் செய்தவர் இந்த சங்கத்தின் தலைவர் பி. செல்லப்பாண்டியன்.
இந்த "பி.செ.பா" தலைமையில்தான் இன்று சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் முன்பு உண்ணாவிரதப் "போர்" இன்று நடந்தது.
உண்ணாவிரதத்திற்காக ஆளுக்கு ஒரு டூவிலரில் சங்கத்து உறுப்பினர்கள் வந்து சேர்ந்தனர். சிலர் டபுள்ஸாக வந்தனராம் ("அந்த டபுள்" இல்லை.. ஒரே டூவீலரில் ரெண்டு பேராக வரும் டபுள்ஸ்).

கையோடு ஒரு பந்தி பரிமாறும் டேபிளையும் தூக்கிக் கொண்டு வந்தனர். கூடவே சில பிளாஸ்டிக் சேர்களும் வந்து இறங்கின. பின்னர் பந்தி டேபிளின் காலை கீழே இறக்கி நீட்டி விரித்துப் போட்டனர். அதில் ஒரு துணியை விரித்தனர்.
அடுத்தபடியாக தலைவர் செல்லப்பாண்டியன் தலைமையில் ஆளுக்கு ஒரு பெரிய துண்டை எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டனர். முன்பக்கமாக தொங்கிய துண்டில் பெரிய சைஸ் மது பாட்டில் படம் (பக்கத்திற்கு ஒன்றாக -2) பளீரென காணப்பட்டது.

பிறகு புன்னகைத்த முகத்துடன் தொடங்கியது உண்ணாவிரதம்... !
உட்கார்ந்திருந்தவர்களை ஒன்னு, ரெண்டு, மூனு என்று (விரல் விடாமல், மனசுக்குள்ளேயே) எண்ணிப் பார்த்தபோது அடேங்கப்பா.. 9 பேர் உட்கார்ந்திருங்கண்ணே....!
எதுக்கு பாஸ் சாப்பிடாம கொள்ளாம இப்படி உக்காந்து உண்ணாவிரதம் இருக்கீங்க என்று தலைவர் செல்லாவிடம் கேட்டபோது, மதுபான விலையை உயர்த்தக் கூடாது. 4 வருடங்களுக்கு ஒருமுறை மது பான விலையை உயர்த்தக் கூடாது. மது குடிக்காத குடிம்பங்களுக்கு மின்கட்டணம், பால் விலையைக் குறைப்பீர்களா என்று கேட்டார்.
அத்தோடு நில்லாமல், மதுவால் கணவன இழந்த பெண்கள், குழந்தைகள், பெற்றோர்களுக்கு மாதம் ரூ. 5000 நிவாரணம் தருவீர்களா.. கரும்பிலிருந்து மது தயாரிக்கப்படுவதால், கரும்பு விவசாயிகளுக்கு விலையை உயர்த்தித் தருவீர்களா என்று சீரியஸாகவே கேட்டார்.
போ.மு: (அதாவது நியூஸை படித்து முடித்து விட்டுப் போவதற்கு முன்பு) இந்த உண்ணாவிரதம் குறித்த போஸ்டரின் உச்சாணியில், அண்ணே வாங்கண்ணே வாங்க என்று அன்போடு அழைத்திருந்தார்கள் சங்கத்து நிர்வாகிகள்.
முடியலை பாஸ்!












Click it and Unblock the Notifications