தங்கமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை
மின்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மின்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், வீரமணி, ஜெயக்குமார் பங்கேற்றுள்ளனர். எம்.பிக்கள் வைத்திலிங்கம், ஹரி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இணையப் போவதாக சில தினங்களாக தகவல் வெளியான நிலையில் பேச்சுவார்த்தைக்கு வந்தால் உட்கார்ந்து பேசுவோம் என்று ஓ. பன்னீர் செல்வம் கூறினார். இதனையடுத்து நேற்றிரவு 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தங்கமணி வீட்டில் ஆலோசனை நடத்தினர்.

ஓபிஎஸ் அணியுடன் பேச குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு ஓ.பன்னீர் செல்வமும் வரவேற்பு தெரிவித்தார். அதே நேரத்தில் சசிகலா, டிடிவி தினகரன் என கட்சியிலும், ஆட்சியிலும் அவர்களின் குடும்பத்தினர் இருக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தார் ஓ.பன்னீர் செல்வம்.
இதனையடுத்து டிடிவி தினகரனை சந்தித்த வெற்றிவேல் எம்எல்ஏ, அமைச்சர்கள் கூட்டம் பற்றி கிண்டலடித்தார். கட்சி தலைமை இல்லாமல் கூட்டம் போட்டது ஏன் என்று கேட்டார். ஓ.பன்னீர் செல்வத்தையும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து இரு அணிகளும் இணைவதில் சிக்கல் நீடித்தது.
இந்த நிலையில் தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்களான வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், வீரமணி மற்றும் அன்பழகன் ஆகிய அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சில அமைச்சர்கள் ஆலோசனையில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்பிக்கள் வைத்தியலிங்கம் மற்றும் ஹரி எம்பி ஆகியோரும் அமைச்சர்கள் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நேற்றிரவு நடத்திய ஆலோசனைக் கூட்டம் கட்சித்தலைமைக்கு தெரியாமல் நடைபெற்றது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இன்றைய தினம் தமிழக அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications