ஆயிரங்கால் மண்டபத்துக்கு இறைவன் அருளால் பாதிப்பு.. அதிமுகவின் இன்னொரு செல்லூர் ராஜூ
இறைவன் அருளால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் ஆயிரங்கால் மண்டபம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதற்கு பதிலாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் ஆயிரங்கால் மண்டபம் பாதுகாக்கப்படுள்ளது என்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக அமைச்சர்களின் பேச்சுகள் நாளுக்கு நாள் புதுப்புது சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2ம் தேதி நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீரவசந்தராயர் மண்டபத்தில் அமைந்துள்ள கடைகளால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் தீ 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தீ விபத்து நடந்த பகுதியை அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழா
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டதால் மீனாட்சி அம்மன் கோவிலில் தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்
இரவு 10.30 மணிக்கு பிடித்த தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் அருகில் இருக்கும் திருமண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவை இறைவனின் அருளால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். இறைவன் அருளால் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தவறுதலாகக் கூறியுள்ளார்.
அமைச்சர்களும் உளறல்களும்
அதிமுக அமைச்சர்கள் செய்தியாளர்களுக்கு அளிக்கும் பேட்டியின் போதோ பொதுமேடையில் பேசும் போதோ தொடர்ந்து உளறி வருவது மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக வெளிப்பட்டு வருகிறது. அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் செல்லூர் ராஜூ. பின்னர் தான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
பேட்டி வேண்டாம் என தவிர்த்த செல்லூரார்
இந்நிலையில் இன்று காலையில் மதுரை விமான நிலையம் வந்த அமைச்சர செல்லூர் ராஜூ பேட்டி வேண்டாம் என்று செய்தியாளர்களுக்கு செய்கை செய்தவாரே விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். பேட்டிலாம் வேண்டாம் தம்பி என்னை விட்டுடுங்க என்று அமைச்சர் பதறியடித்து வெளியேறினார்.