ஐடி அதிகாரிகளை மிரட்டிய அமைச்சர்களை பலியாடுகளாக்க தினகரன் பகீர் ப்ளான்... கோட்டையில் ஷாக்
ஐடி அதிகாரிகளை மிரட்டிய சம்பவத்தில் தமிழக அமைச்சர்களுக்கு நெருக்கடி முற்றுகிறது. இதனை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தவும் டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளாராம்.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போது வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்ட தாம் ஏவிவிட்ட அமைச்சர்களையே பலியாடுகளாக்க டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளது அதிமுக(அம்மா) கட்சியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்கே நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி ரெய்டு நடத்தினர். அதேபோல் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.
அப்போது விஜயபாஸ்கர் வீட்டுக்கு சென்ற அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் மற்றும் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர். அந்த அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தனர்.
விசாரணை வளையத்தில் அமைச்சர்கள்
தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர்கள் இருவரும் எந்த நேரமும் விசாரணைக்குட்படுத்தப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. இதனால் அமைச்சர்கள் இருவரும் பீதியில் உள்ளனர்.
கைது செய்யட்டுமே...
ஆனால் டிடிவி தினகரனோ, வருமான வரித்துறை சோதனைக்கு இடையூறு செய்ததாக கூறி அமைச்சர்களை கைது செய்யப்பட்டும். அப்போதுதான் பாஜகவை கடுமையாக விமர்சிக்க சந்தர்ப்பம் கிடைக்கும். நமக்கும் நல்ல இமேஜ் வரும் என திடமாக நம்புகிறாராம்.
என்னது சிறைக்கா?
இதை கேள்விபட்ட அமைச்சர்கள், நம்மை சிறைக்கு அனுப்பிவிட்டு இவர் நல்லவராக முயற்சிக்கிறாரே என அதிர்ந்து போயுள்ளனராம். இருப்பினும் இது தொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அதனால் முன்ஜாமீன் கேட்கவும் முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள் அமைச்சர்கள்.
பலியாடுகளா?
அப்படியே வழக்குப் பதிவு செய்யும் நிலையில் முன்ஜாமீன் கேட்கவும் தினகரன் அனுமதிப்பாரா எனவும் அமைச்சர்கள் அஞ்சுகின்றனராம். தினகரன் உத்தரவுப்படி செயல்பட போய் நம்மையே பலியாடாக்க முயற்சிக்கிறாரே என்கிற ஆதங்கத்தில் உள்ளனராம் அமைச்சர்கள்.