காவிரி மேலாண்மை வாரியம் கோரி இன்று மனித சங்கிலி..9 கட்சித் தலைவர்கள் பங்கேற்பு
காவிரி மேலாண்மை வாரியம் கோரி 9 கட்சிகள் இணைந்து மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளன.
Recommended Video
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. திமுக உட்பட 9 கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உட்பட 9 கட்சிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
கடந்த 12-ந் தேதி சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக வரலாறு காணாத அளவில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திமுக தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் இன்று தமிழகத்தின் தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனித சங்கிலியில் பங்கேற்கிறார்.
சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தஞ்சாவூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருவாரூரில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பெரம்பலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன், திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பங்கேற்கின்றனர்.