தமிழக அரசு தொடங்கும் வேலை வாய்ப்பு இணையத்தளம்
சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற அமைப்பின் கீழ், வேலை தேடுபவர்களையும் வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்கும் தளமாக, மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் ஒன்று தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையின் ஆளுநர் ரோசய்யா நேற்று உரையாற்றினார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள்.

பொருளாதார வளர்ச்சி
கடந்த 2012-13ம் ஆண்டில் 4.14 சதவீத அளவில் மட்டுமே வளர்ச்சி இருந்தபோதிலும், 2013- 14ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் மேம்பட்டு 5 சதவீதத்தை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில் வடகிழக்குப் பருவமழை அளவு 33 சதவீதம் குறைவாகப் பெய்துள்ள சூழ்நிலையிலும், 2013-14ம் ஆண்டில் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன் அளவை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் வளர்ச்சியின் அடிப்படையிலேயே கிராமப்புற பொருளாதாரம் அமையும்.

இலவச மாடுகள்
ஏழைகளுக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டம் மூலமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 32 ஆயிரம் ஏழை, எளியோர் பொருளாதார மதிப்புமிக்க சொத்துக்களை பெற்றுள்ளனர். 3.72 லட்சம் நிலமற்ற ஏழைப் பெண்கள் பலன் பெற்றுள்ளனர்.

முதலீடுகள்
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் ரூ.770 கோடி உதவியுடன் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டம் என்ற புதுமையாக வடிவமைக்கப்பட்ட திட்டத்த இந்த அரசு தொடங்கியுள்ளது.

மின்சாரம் குடிநீர்
மின்சாரம், குடிநீர், நகர்ப்புற வசதிகள், சாலைகள் போன்ற பல்வேறு துறைகளில் ரூ.834 கோடி மதிப்பீட்டிலான 12 திட்டங்களுக்கு இதன் மூலம் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சாலைகள்
தமிழகத்தில் 1,697 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தவும், 3,529 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தவும் 229 பாலங்கள், சிறு பாலங்களை அமைப்பதற்கும் 2013-14ம் ஆண்டில் ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு இணையதளம்
வேலை தேடுபவர் களையும், வேலை வாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்கும் தளமாக, மாநில வேலைவாய்ப்பு இணையதளம் ஒன்று தொடங்கப்படும். வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் பணியமர்வு உதவிகள் குறித்த தகவல்களை ஒரே இடத் தில் இது வழங்கும்.
மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாடு இயக்கத்திற்காக, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளை நம் மாநிலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

குடியிருப்புகள்
கடந்த 3 ஆண்டுகளில் 1.80 லட்சம் வீடுகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டிற்கான ஒதுக்கீடு ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.2.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டரை ஆண்டுகளில் அரசு 21,750 குடியிருப்புகளை அமைத்து 7,253 குடும்பங்கள் மறு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

கல்வி நிதி
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் இனங்களை சேர்ந்த 10,61,561 மாணவர்களுக்கு ரூ.274.47 கோடி கல்வி தொகை வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை ஆண்டுதோறும் உயர்த்தி, தற்போது 4,000 கோடி ரூபாய்க்கும் மேலாக திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் ஆளுநர் ரோசய்யா.












Click it and Unblock the Notifications