மக்கள் வாக்கு எண்ணிக்கையை வீட்டில் இருந்தே பார்க்க 'public.gelsws.in'
சென்னை: வாக்கு எண்ணிக்கையை மக்கள் வீட்டில் இருந்தே பார்க்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 42 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் நடக்கும் வாக்கு எண்ணிக்கையை வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக public.gelsws.in என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை வீடியோவில் பார்வையிட விரும்புவோர், முதலில் வெப்சைட்டில் பெயர், தொலைபேசி எண்களை வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதன்பிறகு அவர்களுக்கு பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கப்படும். அதன்மூலம் வெப்சைட்டில் வாக்குப்பதிவை பார்வையிடலாம். இந்த வசதி இன்று காலை 8 மணி முதல் கிடைக்கும். மேலும், ஒரு பார்வையாளர் 5 நிமிடங்களுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட முடியும். அதன்பிறகு இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் பார்வையிட புதிதாக லாக் இன் செய்ய வேண்டும்.
வெப்சைட்டில் பார்ப்பது எப்படி?
* public.gelsws.in வெப்சைட் சென்று உங்கள் பெயர், செல்போன் நம்பர் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். எஸ்எம்எஸ்ஸில் பாஸ்வேர்ட் வரும். இதை பயன்படுத்தி வெப்சைட்டுக்குள் செல்லலாம்.
* தமிழகத்தின் 39 தொகுதிகளின் பெயர் பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
* எந்த நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை நாம் பார்க்க விரும்புகிறோமோ, அந்த தொகுதியின் பெயரில் ‘கர்சர்' வைத்து கிளிக் செய்ய வேண்டும்.
* நாடாளுமன்ற தொகுதியின் 6 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களில் ‘கர்சர்' வைத்து கிளிக் செய்தால், குறிப்பிட்ட அந்த சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை நேரடியாக பார்க்கலாம்.
* கம்ப்யூட்டரின் முழு ஸ்கிரினில் பார்க்க வீடியோ காட்சியின் இடது பக்கம் கீழே டிவி போன்று உள்ள ஐகானை அழுத்தினால் காட்சிகள் தெளிவாகவும் பெரிதாகவும் தெரியும்.
* தேர்தல் கமிஷன் செய்தி குறிப்பில் வாக்கு எண்ணிக்கை குறித்த வீடியோ இன்று காலை 8 மணி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
* ஆனால் வெப்சைட் நேற்று பிற்பகல் முதலே இயங்க துவங்கிவிட்டது. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் நடந்த பல்வேறு காட்சிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன.
* விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட சில தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மைய காட்சிகளை மாலை 5 மணிக்கு மேல் பார்க்க முடிந்தது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.