திரும்ப ஆப்கன் வந்தால் கொல்வோம்: பாதிரியார் பிரேம்குமாரை மிரட்டி அனுப்பிய தீவிரவாதிகள்
சென்னை: தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கபட்ட பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார், மீண்டும் ஆப்கானிஸ்தான் செல்லத் தயார் என்று கூறியுள்ளார்.
தேவகோட்டையைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார், சமூக சேவைக்காக ஆப்கானிஸ்தான் சென்றிருந்தார். கடந்த ஜூன் மாதம் அவரை தீவிரவாதிகள் கடத்தி, பிணைக் கைதியாக வைத்திருந்தனர். அவரை மீட்க வேண்டும் என குடும்பத்தினரும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அரசுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் பிடியில் இருந்த அலெக்சிஸ் பிரேம்குமார் கடந்த 22-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். அன்று மாலையே டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட பாதிரியாரை மத்திய அரசு அதிகாரிகள் வரவேற்று ஹோட்டலில் தங்க வைத்தனர்.
கடத்தல் சம்பவம் குறித்து அவரிடம் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் நேற்று மாலை 5.45 மணியளவில் டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது, ‘‘நான் நலமாக இருக்கிறேன். நான் தாயகம் திரும்ப பெரும் உதவியாக இருந்த மத்திய, மாநில அரசுகளுக்கும், அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

காப்பாற்றியவர்களுக்கு நன்றி
பாதிரியார் அலெக்சிஸ் இன்று சென்னை லயோலா கல்லூரியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்போது தன்னை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மத்திய, மாநில அரசுகளின் முயற்சியாலும் கடவுளின் கிருபையாலும் நான் தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுதலையானேன்.

துப்பாக்கி முனையில்
கடந்த 8 மாதங்களாக தீவிரவாதிகள் என்னை துப்பாக்கி முனையில் சிறை வைத்திருந்தனர். அடிக்கடி அவர்கள் என்னை இடம் மாற்றிக் கொண்டே இருந்தனர்.

சங்கிலியால் கட்டி
என்னை துப்பாக்கி முனையில் வைத்திருந்ததோடு சங்கிலியால் பிணைத்து 5 பூட்டுகளை போட்டு பூட்டி இருந்தனர். ஆனால் அவர்கள் என்னை பட்டினி போடவில்லை. நான் குடிப்பதற்கு சிறிதளவு தண்ணீர்தான் கொடுத்தனர். இதனால் என்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

மதம்மாற்றவில்லை
நான் அங்கு அப்பாவி தலிபான் மக்களுக்கு கல்வியறிவு புகட்டுவதற்காகத்தான் சென்றிருந்தேன். மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை. அவர்கள் என்ன நோக்கத்திற்காக என்னை கடத்தினார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

பணம் கொடுத்தார்களா?
என்னை மீட்பதற்கு 20 லட்சம் டாலர் கொடுக்கப்பட்டதா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி என்னை மீட்டு அவரது ஆடையை எனக்கு கொடுத்து என்னை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.

மோடிக்கு நன்றி
என்னை மீட்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

வந்தால் கொல்லுவோம்
மீண்டும் ஆப்கானிஸ்தான் வந்தால் கொலை செய்துவிடுவதாகவும் தீவிரவாதிகள் மிரட்டினர். ஆப்கான் மக்கள் மிகவும் பாசமானவர்கள் என்று தெரிவித்த அலெக்சிஸ், தனது தொண்டு நிறுவனம் தெரிவித்தால் மீண்டும் அப்கானிஸ்தானிற்கு செல்வேன் என்றும் கூறினார். தாலிபான்களும் அப்கானிஸ்தான் அரசும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே தன்னுடைய கோரிக்கை என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications