சென்னையில் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் புரட்டியெடுத்த மழை.. 3 நாட்களுக்கு நீடிக்குமாம்!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசும்.
இந்நிலையில் சென்னை மாநகரின் பல பகுதிகளில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் கூடிய இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. நேற்றிரவு 10 மணியளவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டம், தேவாலாவில் 40 மில்லி மீட்டர் மழையும், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், கடலூர் ஆகிய பகுதிகளில் 30 மில்லி மீட்டர் மழையும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதால் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களுக்கும் கடலுக்குச் செல்லாமல் இருக்க அறிவுருத்தப்பட்டுள்ளது.