காவிரி மேலாண்மை வாரியம்- மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் தமிழகம் ஒத்துழைக்கக் கூடாது: வேல்முருகன்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மனமில்லாத மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் தமிழக அரசு ஒத்துழைக்கக் கூடாது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கடலூர் : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மனமில்லாத மத்திய அரசுக்கு தமிழகம் எந்த விதத்திலும் இனி ஒத்துழைக்கக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்துள்ள ஆறு வாரக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் போராட்டம் வெடித்துள்ளது.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை விவசாயிகள் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு மனமில்லை. அப்படி மனமில்லாத அரசுக்கு தமிழக அரசு எந்தவிதத்திலும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது.
நீதிமன்றத்தில் சட்டரீதியான நடவடிக்கை ஒரு பக்கம் எடுத்தாலும், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரி ஒதுக்கீட்டை செலுத்தக்கூடாது என்றும், மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்தத் துடிக்கும் கெயில், மீத்தேன், நியூட்ரினோ என அனைத்து திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக பல் பிடுங்கப்பட்ட வேறு எந்த ஒரு அமைப்பையும் ஏற்பதற்கு தமிழக மக்களும் விவசாயிகளும் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எந்த விதத்திலும் தமிழக அரசையோ மக்களையோ மதிக்காத மத்திய அரசுக்கு தமிழக அரசு ஏன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேல்முருகன் கேள்வியெழுப்பி உள்ளார்.