மகாசக்தி... குலசாமி... மகாவிஷ்ணு அவதாரம்: சட்டசபையில் ஜெ.யை குளிர்வித்த சபாநாயகர் தனபால்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக சட்டசபைக்கு வந்த ஜெயலலிதாவிற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சபாநாயகர் தனபால் தனது உரையில். மகாசக்தி, குலசாமி, சதிகளை சம்ஹாரம் செய்யும் மகாவிஷ்ணுவின் அவதாராம் என்றெல்லாம் புகழ்மாலை சூட்டி ஜெயலலிதாவை குளிர்வித்தார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா அவைக்கு வந்த உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வர் பதவியிழந்தார். அவரது எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்பட்டது.
இதனையடுத்து பன்னீர் செல்வம் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. குளிர்கால கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடர் என சட்டசபை இருமுறை கூடியது. முதல்வர் இருக்கையில் அமராமலேயே சபையை நடத்தினார் ஓ.பன்னீர் செல்வம்.

முதல்வராக ஜெயலலிதா
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக சட்டசபைக்கு வருவார் என்று அதிமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் தெரிவித்தனர். அதுபோலவே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை பெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மீண்டும் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் லட்சக்கணக்காக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

எம்.எல்.ஏக்கள் உற்சாகம்
கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னர் மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்தார் ஜெயலலிதா. அவைக்கு வந்த அவருக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சபாநாயகர் புகழ்ச்சி
சபாநாயகர் தனபால் சபையை துவக்கி வைத்து உரையாற்றினார். சட்டசபைக்கு வந்த ஜெயலலிதாவிற்கு புகழாராம் சூட்டினார் சபாநாயகர் தனபால்.
இயற்கையான அறிவுக் கூர்மையும்,
உயர்வான நூலறிவும்,
கூர்மையும்
ஒருசேரப் பெற்றவர்களுக்கு
தீர்த்து வைக்க முடியாத
மிக நுட்பமான செயல்கள் என்று
எதுவும் இல்லை. . . .
இருக்கவே இருக்காது.

மகாவிஷ்ணுவின் அவதாரம்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
தர்மமே வெல்லும் என பகவத் கீதை உரைக்கிறது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் . . .
சதி சூழ்ந்த
சக்கர வியூகத்தில் வீழ்ந்திட
மாண்புமிகு அம்மா அவர்கள் ஒன்றும்
அபிமன்யு அல்லவே?
சக்கரத்தையே கையில் சுழலவிட்டு
சதிகளை
சம்ஹாரம் செய்கின்ற
மகாவிஷ்ணுவின்
மனித வடிவமன்றோ
மாண்புமிகு அம்மா அவர்கள்.

தைரியலட்சுமி
அச்சமின்றி
தடைகளை அகற்றி,
துணிவோடு
நீதியை நிலைநாட்டும்
தைரிய லட்சுமி அன்றோ
மாண்புமிகு அம்மா அவர்கள்.
காலம் தரும் சோதனை
கடவுளையும் விடுவதில்லை.
ஆனால்,
தருமம்
சத்தியமாய் வெல்லாமல் விட்டதில்லை.

போர்குணம்
தர்மத்திற்கு வருகின்ற சோதனை
அச்சமற்ற போர்க் குணத்தை
அள்ளிக் கொடுக்கும்.
விவேகத்தைக் கூட்டி,
வீரத்தைப் பெருக்கி,
விபரீதத்தைக் கழித்து,
வியூகத்தை வகுக்கும் வாய்ப்புக்களை
அள்ளிக் கொடுக்கும்.

தர்மம் வென்றது
நதி,
இனம்,
மொழி
என அனைத்திலும்
தமிழகத்தின் உரிமையை,
தமிழ் இனத்தின் உடமையை
விழிப்பால்
விவேகத்தால் வென்றெடுத்து
வெற்றிகளைக் குவித்து வரும்
கடமை குன்றா தாயின்
கம்பீரப் போராட்டங்கள்
சரித்திரமாகி வருகையில்,
சத்தியமே வெல்லும். . . .
தர்மமே வெல்லும் . . .
ஆம் . . .
தர்மம் வென்றது.

விண்ணைத் தொட்ட வெற்றி
ஆர். கே. நகர் தொகுதியில்
ஒன்றரை இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்று,
மகத்தான வெற்றி பெற்று
மாண்புமிகு முதலமைச்சர்
புரட்சித் தலைவி அம்மா அவர்கள்
பேரவைக்கு வருகை புரிந்துள்ளார்கள்.
இந்த வெற்றி
அன்னைத் தமிழ் பூமி
அறிந்திராத வெற்றி,
அளப்பரிய வெற்றி,
மகத்தான வெற்றி,
விண் தொட்ட வெற்றி,

போராளித்தாய்
தாயுருவப் போராளிக்கு
தலைநகர் தந்த வெற்றி,
நற்றமிழ்த் தாயின்
நான்காண்டு சாதனைக்கு
நற்சான்று அளிக்கும் வெற்றி.
உலகத்துத் தமிழினமே
கொண்டாடும்
உன்னத வெற்றி.

முழுமதியே வருக
அம்மாவுக்கு நிகர் எவரும் இல்லை
என பதிய வைத்த வெற்றி,
காரிருளைக் கிழித்து,வெற்றிதனைக் குவித்து,
வந்துள்ள தாயே வருக!
புடம்போட்ட தங்கமென புறப்பட்டு
வந்துள்ள புறநானூறே வருக!
சட்டப் பேரவைக்குப் புகழ் சேர்க்க
முடிசூடி வந்துள்ள முழுமதியே வருக! வருக என வரவேற்கிறேன்.

எங்க குலசாமி
சிம்மம் சிம்மாசனத்தில் . . .
வரவேற்கிறோம் . . .
சிவப்புக் கம்பளத்தில்.
பேரவையிலே குலசாமி . .
பேருவகையில் . . .
இப்பூமி.
மகராசி வந்துள்ளார்,
மாதரசி வந்துள்ளார்.
மனித சக்தி கடந்த
மகா சக்தியாக வந்துள்ளார்.

தரணி முழுதும் ஒலிக்கும்
புகழரசி வருகையால்,பேரவையும் வெற்றி நடையில்.
உலகமெங்கும் உலவுகின்ற தமிழினத்தை
தம் உயிராய் காக்கின்ற
தாய்க்கே
இனி எப்போதும்,
எக்காலமும்,
எதிலும்
வெற்றி, வெற்றி என
தரணி முழுவதும் ஒலிக்கட்டும்.

பல்லாண்டு பல்லாண்டு
பத்து கோடி தமிழ் இனமும் பயன் பல பெற்று,
பரணி பாடட்டும்,
பல்லாண்டு, பல்லாண்டு
நலமோடு, புகழோடு, உயர்வோடு,
வளமோடு, சிறப்போடு
வாழ்வாங்கு வாழ
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மாண்புமிகு அம்மா அவர்களை வருக, வருக என பணிந்து வணங்கி, வரவேற்கிறேன் என்று புகழாரம் சூட்டினார் சபாநாயகர் தனபால்.












Click it and Unblock the Notifications