தமிழகம் வரும் சோனியா, ராகுலுக்கு கருப்புக் கொடி- தமிழக மாணவர் கூட்டமைப்பு
சென்னை: தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக தமிழக மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக சோனியா, ராகுல் ஆகியோர் தமிழகம் வருகை தர உள்ளனர். சென்னையில் நாளை மறுநாள் தீவுத் திடலில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் சோனியாவும் கருணாநிதியும் ஒரே மேடையில் பேச உள்ளனர்.

2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் இரு தலைவர்களும் ஒரே மேடையில் பேச இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தமிழக மாணவர் கூட்டமைப்பினர் இன்று மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. அந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா தமிழகத்துக்கு பிரசாரம் செய்ய வருகிறார். அவரது வருகையை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டம் நடத்த உள்ளோம். இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இதேபோல் தமிழகம் வருகை தரும் ராகுல் காந்திக்கு எதிராகவும் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக மாணவர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications