மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுப்போம்: பட்ஜெட் உரையில் முதல்வர் ஓ.பி.எஸ். உறுதி
சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுப்போம் என்று தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு, சட்டத்திற்கு புறம்பாக அணை கட்ட எடுக்கும் முயற்சிகளைத் தடுக்க ஒரு இடைக்கால மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும் அவற்றைத் தடுக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். போற்றுதலுக்குரிய புரட்சித் தலைவி அம்மா வலியுறுத்தியவாறு காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க உரிய நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து எடுக்கும்.
முக்கிய நதிநீர் இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிகளை இணைப்பதற்கான பணிகள் 369 கோடி ரூபாய் செலவில், நான்கு கட்டங்களாக நடந்து வருகின்றன.
காவிரி-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 254.45 கோடி ரூபாய் செலவில் கட்டளையில் கதவணை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. வரும் நிதியாண்டிற்கு நதிநீர் இணைப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள 253.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.