இதெல்லாம் ரொம்ப லேட்டுங்க... ரஜினிக்கு விருது குறித்து ஈவிகேஎஸ் கருத்து
சென்னை: நடிகர் ரஜினிகாந்திற்கு பத்ம விபூஷண் விருது முன்பே கொடுத்து இருக்க வேண்டும். இப்போது தாமதமாக கொடுத்து இருக்கிறார்கள் என தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
தமிழக காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளக்கோவன், நடிகை குஷ்பு, நா.சே. ராமச்சந்திரன், ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய இளங்கோவன், பின்னர் சேவாதள தொண்டர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் அவர் இனிப்பு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் இளங்கோவன் பேசியதாவது:-
சட்டசபைத் தேர்தல்...
தமிழகத்தில் இன்னும் 4, 5 மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த காங்கிரஸ் மட்டுமின்றி பொது மக்களும் தயாராக வேண்டும்.
திறமையான ஆட்சி...
பொது மக்கள் நியாயமான திறமையான ஒரு ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே இதற்கு காங்கிரசுடன் மக்களும் சேர்ந்து உழைக்க வேண்டும்' என்றார்.
ரஜினிக்கு விருது...
அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, ‘நடிகர் ரஜினிகாந்திற்கு பத்ம விபூஷண் விருது முன்பே கொடுத்து இருக்க வேண்டும். இப்போது தாமதமாக கொடுத்து இருக்கிறார்கள். இருந்தாலும் ரஜினிக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என இளங்கோவன் பதிலளித்தார்.
பணம் பறிக்கும் கல்லூரிகள்...
மாணவிகள் மரணம் குறித்த கேள்விக்கு, ‘மாணவிகள் மரணத்திற்கு காரணமான கல்லூரி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள எல்லா கல்லூரிகளும் பணம் பறிக்கும் இடமாகவே உள்ளது. குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் தான் துணைவேந்தர் பதவி என ஆகிவிட்டது. ஆட்சியாளர்கள் வியாபாரிகள் போல செயல்படுகிறார்கள்' என இளங்கோவன் குற்றம் சாட்டினார்.