தமிழக காங். அறக்கட்டளையில் மீண்டும் ஊழல்! திருநாவுக்கரசருக்கு தொடரும் நெருக்கடி!
தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் ஊழல் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து டெல்லி மேலிடம் விசாரணை நடத்த உள்ளது.
சென்னை: தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் ஊழல் நடந்துள்ளதாக மீண்டும் புகார் வெடித்துள்ளது. இந்த விவகாரம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு யார் தமிழக காங். தலைவராக இருக்கிறார்களோ அவர்கள்தான் முதன்மை உறுப்பினர்கள். இந்த அடிப்படையில் அறக்கட்டளை பணம் கணக்குகள் ஏதுமின்றி செலவிடப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றன.

இளங்கோவன் விவகாரம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக இருந்த இதேபோல் புகார் எழுந்தது. பின்னர் டெல்லி மேலிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி பஞ்சாயத்தை முடித்து வைத்தது.

மீடியா பிரமுகரே காரணமாம்
தற்போது திருநாவுக்கரசர் தலைவரான பின்னரும் இதேபோல் ஒரு புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி மேலிடத்துக்கு ஏகப்பட்ட புகார்கள் பறந்துள்ளன. மேலும் காங்கிரஸ் கமிட்டி தலைவராக வருகிறவர்களுடன் காலம் காலமாக நெருக்கமாக இருக்கும் அந்த மீடியா பிரமுகர்தான் நெளிவு சுளிவுகளை கற்றுத் தருகிறார் என்கிற புகாரும் தட்டிவிடப்பட்டுள்ளதாம்.

தங்க கடத்தல் ராஜேந்திரன்
இதையடுத்து உரிய கணக்குகளை ஆராய டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாம். ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் குட்லக் ராஜேந்திரன், தங்க கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெருக்கடியில் திருநாவுக்கரசர்
அவர் திருநாவுக்கரசருக்கு மிக நெருக்கமானவர்; அதனால் திருநாவுக்கரசரையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்கலாம் எனக் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அறக்கட்டளை ஊழல் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளதால் திருநாவுக்கரசருக்கு நாலாபக்கமும் நெருக்கடி அதிகரித்துள்ளன என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications