ப.சி, கா.சியை விடுங்கப்பா.. புது மெம்பர்ஸைப் புடிங்க.. கட்சியினரை முடுக்கி விட்ட இளங்கோவன்!
சென்னை: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சர்ச்சையிலிருந்து விடுபட்டு கட்சிப் பணியில் தீவிரமாகியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கையை அவர் இன்று தொடங்கி வைத்தார்.
ஜெயந்தி நடராஜன் விலகலைத் தொடர்ந்து அவரை விமர்சிப்பதாக கருதி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் குறித்து சாடை மாடையாக இளங்கோவன் சொல்லப் போக பெரும் அக்கப் போர் ஆகி விட்டது. இதையடுத்து டெல்லி சென்ற இளங்கோவன் அங்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக்கை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் சென்னை திரும்பி விட்ட இளங்கோவன் இன்று மாலை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். பின்னர் புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை அவர் தொடங்கி வைத்தார்.
புதிய உறுப்பினர் சேர்க்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உறுப்பினர்களை சேர்க்கும் பணியைத் தொடங்கி வைத்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உறுப்பினர் சேர்க்கும் படிவங்களை அந்தந்த மாவட்ட தலைவர்களிடம் வழங்கினார்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், புதுக் கட்சி ஆரம்பித்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்தி வருவது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications