10 தொழிலாளர்களைப் பலி கொண்ட ராணிப்பேட்டை சம்பவம்: 70 தொழிற்சாலைகளுக்கு சீல்?
வேலூர்: கழிவுநீர் தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் உயிரிழந்த ராணிபேட்டை தோல் தொழிற்சாலையில் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு அறிக்கைக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப் படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டில் நேற்று அதிகாலை தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டி உடைந்து தொழிலாளர்கள் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து பலியான 9 வடமாநில தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊருக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

கண்ணமங்கலத்தை சேர்ந்த சம்பத் என்பவரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து குறித்து விசாரணை நடத்தியதில் இடிந்த தொட்டி அனுமதி பெறாமல் இயங்கியது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்கந்தன் தலைமையில் 5 அதிகாரிகள் இன்று விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது உடைந்த கழிவுநீர் தொட்டி, கழிவுநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்டனர். இதையடுத்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 43 பேர் முக கவசம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்தனர். கழிவுநீர் தேங்கிய இடங்களை பொக்லைன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு அகற்றப்படும் கழிவுகளை டிராக்டரில் ஏற்றிச்சென்று அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று குழிதோண்டி பாதுகாப்பாக புதைக்கப்படும் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வின்போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பிரியதர்ஷினி உடன் இருந்தார்.
இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என ஆய்வு மேற்கொண்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதன்படி சுமார் 70க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். மேலும், விபத்துக்குள்ளான சுத்திகரிப்பு நிலையத்துக்கு சீல் வைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன












Click it and Unblock the Notifications