இன்று முதல் குரூப்-1 தேர்வு விண்ணப்ப விநியோகம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் குரூப் 1 பணிக்கான தேர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது.
74 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வுக்கு இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் உயர் பதவிகளுக்கான குரூப் 1 தேர்வை நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது. துணை கலெக்டர் பணியிடங்கள்-19, போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிடங்கள் -26, உதவி வணிக வரி அலுவலர்கள் பணியிடங்கள் -21, மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்கள்- 8 ஆகிய 74 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.
இன்று அறிவிப்பு வெளியானதும். தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தற்போது 3 அல்லது 4 ஆம் ஆண்டு பட்டப்படிப்புக்கான இறுதி தேர்வு எழுதிவிட்டு சான்றிதழுக்காக காத்திருப்போரும் இந்த தேர்வை எழுதலாம். இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி கடைசிநாள்.
இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 நிலைகளை கொண்டவை. ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மறுதேர்வுக்கு செல்லமுடியும். துணைகலெக்டர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில வருடங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக முடியும். அதுபோல துணை சூப்பிரண்டு பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகள் கழித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி. ஆக முடியும்.
முதல் நிலை தேர்வு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 33 மையங்களில் நடக்க உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.