டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு.. 15 லட்சம் பேர் எழுதினர் - செல்போன், கால்குலேட்டருக்குத் தடை...
தமிழகம் முழுவதும் 301 மையங்களில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. செல்போன், கால்குலேட்டருக்கு தடை விதிக்கப்பட்டது.
சென்னை : டிஎன்பிஎஸ்சி நடத்தும் 5,451 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதியுள்ளனர். தேர்வில் செல்போன், கால்குலேட்டர்களுடன் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் எச்சரித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து உள்ளிட்ட 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு இன்று நடைபெற்றது.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
தொகுதி 4-ல் (குரூப்-4) அடங்கிய 5451 காலிப்பணியிடங்களுக்கான தேர்வினை இன்று மாநிலத்தில் உள்ள 301 மையங்களில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ள இத்தேர்வுக்கூட ஹால் டிக்கெட்டை தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண் / பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை இணையதள பக்கத்தில் உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணத்தையும் அதே இணையதளப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை கண்டிப்பாக உடன் எடுத்துவரவேண்டும். தேர்வுக்கூடத்திற்குள் நுழையும் போதும், அறைக்கண்காணிப்பாளர் கேட்கும்போதும் காண்பிக்கவேண்டும். ஹால்டிக்கெட்டுடன் வரும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வுக்கூட வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
உடன் வரும் பெற்றோர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களையும் விண்ணப்பதாரர் தேர்வுக்கூடத்திற்குள் எடுத்துவரவோ, வைத்திருக்கவோ கண்டிப்பாக அனுமதி கிடையாது. அதையும் மீறி தேர்வாளர்கள் மேற் சொன்னவைகளை வைத்திருப்பது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். தேர்வு மையத்தை, கூடத்தை மாற்றவோ, ஹால்டிக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள விருப்பப்பாடத்தை மாற்றி எழுதவோ கண்டிப்பாக அனுமதியில்லை. தேர்வாணைய அறிவுரைகளை மீறும் விண்ணப்பதாரர்கள் மீது தேர்வாணைய அறிவுரைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.