போலீஸ் சித்ரவதை தாங்க முடியாமல் காவல் நிலையத்தில் அரசுப் பேருந்து டிரைவர் தீக்குளிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே போலீசார் தன்னை சித்ரவதை செய்வதை தாங்க முடியவில்லை என்று கூறி அரசுப் பேருந்து டிரைவர் ஒருவர் காவல் நிலையத்தில் தீக்குளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்து உள்ள மென்னந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். அரசுப் பேருந்து டிரைவர். அவர் பணி முடிந்து வீட்டிற்கு சென்றிருந்திருக்கிறார். அவரது வீட்டிற்கு வந்த போலீசார் வழக்கு விசாரணைக்காக கோபால் மற்றும் அவரது மனைவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அவர்கள் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் அவர்களை அடித்தும் சித்ரவதை செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த கோபால் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவர் காவல் நிலையத்திலேயே தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார்.
தீக்குளித்ததில் காயம் அடைந்த கோபாலை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.