நாகர்கோவிலில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு: போராட்டம்
நாகர்கோவில்: சம்பளம் வழங்குவதில் தாமதம் செய்யும் நாகர்கோவில் போக்குவரத்து கழக நிர்வாகிகளை கண்டித்து அரசுப் பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் 12 இடங்களில் அமைந்துள்ளன. இவற்றின் மூலம் சுமார் 900 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் கிடைக்கும் வருமானத்தை கொண்டு நேரடியாக சம்பளம் வழங்குகிறார்கள். இதனால் மாதம் 10ம் தேதி வரை கூட தொழிலாளர்கள் சம்பளம் பெறாமல் இருக்கும் அவல நிலை உள்ளதாக தொழிலாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.
முறையான பராமரிப்பு மற்றும் உதிரி பாகங்கள் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகளால் டிரைவர், கண்டக்டர்கள் தான் பலிகடா ஆகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் இந்த மாதமும் வழக்கம் போல் சம்பளம் தாமதம் ஆகி உள்ளது. 3ம் தேதிக்கு மேல் ஆகியும் கூட டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்த நிலையில் நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனையில் சம்பளம் கிடைக்காத அரசு பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிமனை முன்பு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தின் போது அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டம் காரணமாக பணிமனையில் இருந்து வெளியே வந்த பேருந்துகளும் அப்படியே நிறுத்தப்பட்டன. போராட்டம் குறித்து அறிந்ததும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஊழியர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications