ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவியுங்கள் - மோடிக்கு முதல்வர் கடிதம் #FishermenProtest
ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: வெள்ள சேதம் மற்றும் மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு உதவக் கோரிக்கை விடுத்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் கோரத்தாண்டவம் ஆடிய ஓகி புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

புயலின்போது ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் மாயமாகியுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்கும் பணியில் இந்தியக் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை என்பது மீனவ கிராம மக்களின் கவலை.
ஓகி புயல் குறித்த முறையான முன்னறிவிப்பு இல்லாததால் அவர்கள் கடலுக்குள் சென்று மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்பதில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது என்பது மீனவ கிராம மக்களின் குற்றச்சாட்டு
லட்சத்தீவுகளில், மகாராஷ்டிரத்தில் மற்றும் பல்வேறு இடங்களில் பத்திரமாக உள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால் அவர்கள் ஏன் இன்னும் ஊர் திரும்பவில்லை என்பது மீனவர்களின் கேள்வியாகும்.
மாயமான மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஹெலிகாப்டர்கள், அதிவேக போர்க்கப்பல்களை பயன்படுத்தி மீட்புப் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மீனவ கிராம மக்கள் காலையில் பேரணியாக சென்றனர்.
நீரோடியில் இருந்து வல்லவிளை வரை உள்ள சுற்றுவட்டார கிராம மீனவ மக்கள், கொல்லங்கோட்டில் இருந்து குழித்துறையை நோக்கி சென்றனர்.குழித்துறை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி குழித்துறை ரயில் நிலையத்துக்குள் நுழைந்த மீனவ குடும்பங்கள், ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் வரும் வரை தங்களின் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பது பல்லாயிரக்கணக்கான மீனவ மக்களின் நிலைப்பாடு. பல மணிநேரமாக நடைபெறும் போராட்டம் தலைநகரை எட்டியுள்ளது. இதனையடுத்தே உயிரிழந்த மீனவர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதியை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஆனால் அதனை ஏற்க மீனவர்கள் மறுத்து விட்டனர்.
பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் எடப்பாடியார், ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வெள்ள சேதம் மற்றும் மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று முதல்வர் எழுதிய கடிதத்தில், கடந்த 29-ம் தேதி ஒக்கி புயல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வீசியதால் கன்னியாகுமரி மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அனைவரும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் மின் கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. சாலை போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் மற்றும் தோட்டக் கலை பயிர்கள் அதிகமாக சேதம் அடைந்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மறுசீரமமைப்பு பணிகள் செய்ய அதிக அளவில் நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து அதிக அளவில் நிதி கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications