பாஜக ஆட்சி வந்தால்தான் தமிழகத்திற்கு இ டெண்டர் வருமாம்.. தமிழிசைக்கு ஆசை, தோசை, அப்பளம், வடை!
அரசுத் துறை சார்ந்த பணிகள் மேற்கொள்வதற்கு இ-டெண்டர் முறையானது தமிழகத்தில் அமல்படுத்த வேண்டுமானால், பாஜக ஆட்சி மலர்ந்தால்தான் முடியும் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
வேலூர்: தமிழகத்தில் இ-டெண்டர் முறையை அமல்படுத்த வேண்டும் என்றால், அதற்கு பாஜக ஆட்சி மலர்ந்தால் தான் முடியும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக சார்பில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழிசை பேசபகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக மீனவர்களை பாதுகாக்கும் அரசு மத்தியில் செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்டதுதான் முதலும், கடைசியுமாக இருக்கும்.
ரேஷன் கடைகளில் பொருள்களை கிடைக்கவில்லை என்பதற்காக ஆர்ப்பாட்டம் நடத்திய கட்சி பாஜகதான். ஆனால் மு.க.ஸ்டாலினோ பாஜக மேல்தட்டு மக்களுக்கான கட்சி என்றும் திமுக மக்களுக்கான அதுவும் அடித்தட்டு மக்களுக்கான கட்சி என்றும் தெரிவித்துள்ளார். அவரது சொத்து மதிப்பை கணக்கிட்டால் எது அடித்தட்டு மக்களுக்கான கட்சி என்பது மக்களுக்கு புரியும்.
அரசுத் துறை சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க இணையதளம் வாயிலாக டெண்டர் விடும் முறையான இ-டெண்டர் தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போதே அதாவது 15 ஆண்டுகளுக்கு முன்பே இ- டெண்டர் விடப்பட்டது. தமிழ்நாட்டில் இ-டெண்டர் வேண்டுமானால் பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும். தமிழக அரசு வாட் வரியை உயர்த்தியதால்தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது என்றார் அவர்.