பித்தப்பை கல் கரைய சாம்பார் வடை... சர்க்கரை நோய் நீங்க ஸ்வீட் ...இதுதான் ஹீலர் பாஸ்கரின் ஸ்டைல்
பித்தப்பை கற்கள் கரைய சாம்பார் வடை சாப்பிடுமாறும் சர்க்கரை நோய் நீங்க ஸ்வீட் எடுத்துக் கொள்ளுமாறும் ஹீலர் பாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
சென்னை: இயற்கை முறையில் வீட்டிலேயே சுகபிரசவம் என்று விளம்பரப்படுத்தியதால் கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கர் பித்தப்பை கற்கள் கரைய சாம்பார் வடை சாப்பிடுமாறு கூறியுள்ளார். அதுபோல் சர்க்கரை நோய் தீர இனிப்புகளை உட்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவையை சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் மருந்தில்லா மருத்துவம் மற்றும் தொடு சிகிச்சை மூலம் நோய்களையும் உடல் உபாதைகளையும் போக்கி வருவதாக கூறப்படுகிறது.
இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் கோவையில் அனாடமிக் தெரபி பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். தனது பேச்சை கேட்டாலே போதும் கேன்சர், எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்கள் பறந்துவிடும் என்றார்.
ஹீலர் பாஸ்கர்
இயற்கை முறையில் வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்வது தொடர்பான பயிற்சி வகுப்புக்கு இவர் விளம்பரம் அளித்திருந்தார். அந்த பயிற்சி முகாமை கோவை மாவட்ட நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்தது. மேலும் ஹீலர் பாஸ்கரையும் கைது செய்தது. திருப்பூரில் யூடியூப் பார்த்துவிட்டு இயற்கை முறையில் மனைவிக்கு கணவனே பிரசவம் பார்த்ததால் அவர் இறந்த சம்பவத்தை அடுத்து அதே விஷயத்தை ஹீலர் பாஸ்கரும் கையில் எடுத்து கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பித்தப்பை கற்கள் கரைய
பித்தப்பை கற்கள் கரைய மருந்து, அறுவை சிகிச்சை எல்லாம் தேவையில்லை. சாதாரணமாக தினமும் மாலை சாம்பார் வடை சாப்பிட்டால் போதுமானது என்று கூறியுள்ளார். சாம்பார் வடை சாப்பிடுவதால் பித்தப்பை கற்கள் எப்படி கரையும் என்கிறது அலோபதி மருத்துவம்.
நீரிழிவு நோய்
சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்பு இருக்கும் இடத்தில் கூட தலைவைத்து படுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுவர். ஆனால் ஹீலர் பாஸ்கரோ சர்க்கரை நோய்க்கு இனிப்பு நோய் என்ற பெயர் உண்டு. எனவே சர்க்கரை நோயாளிகள் இனிப்புகளை அள்ளி சாப்பிடுங்கள். அந்த நோய் பறந்துவிடும் என்கிறார்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி கேடு
அம்மை தடுப்பூசி, காலரா, போலியோ தடுப்பு மருந்துகள் மற்றும் ஊசிகள் என்றால் நோய் கிருமியை தடுப்பது இல்லை. மாறாக நோய் கிருமியை எடுத்து உடம்பிற்குள் அனுப்புவதுதான் தடுப்பூசி. அது நம் உடலுக்குள் செலுத்தியவுடன் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அந்த கிருமியுடன் போராடி கொன்றுவிடும். இதுபோல் வருங்காலத்தில் அந்த கிருமியால் நாம் பாதிக்கப்படும்போது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகள் கிருமியுடன் சண்டை போடும் என்கிறார்.